தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, November 4, 2012

தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு




தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு என்னும் எனது நூலிற்கு 


கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் கவிதை வடிவில் எழுதிய வாழ்த்துரை




ஓர் எடுத்துக்காட்டு








வினாக்களின் தேயம்
கொண்டாடும் விழா என்பதா?
வேள்வி நடத்தும் மூளையின்
வேர்வைப் பெருமங்கலம் என்பதா?

குவிமையம் ஒன்றில் குதித்து
முத்துக் குளிப்பது என்பதா?
ஆய்வு என்னும்
அறிவுலக நடவடிக்கையை எந்த
வார்த்தைக் கட்டமைப்புக்குள்
வடிவம் கொடுத்துப் பேசுவது?

கனம் மிக்க
ஓர் ஆய்வு ஏடு எனது
கண்ணில் படும்போதும் நான் அதைக்
கையில் தொடும்போதும்
புலரிவானங்களை
வசப்படுத்திய புளகம்!

அப்போதெல்லாம்
ஓய்வெடுக்க உதகைக்கோ
கொடைக்கானலுக்கோ என் கவிதைகளை
அனுப்பவதில்லை நான்

ஆய்வேடு என்னுள்
அறிவுச் சிலிர்ப்புகளை, கருத்துக் கலவரங்களை
ஏற்படுத்தினால் அதைப்பார்த்து
என் கவிதைகள் ஆய்வாளர்க்குப்
பூச்செண்டுகள் தயாரிக்கும்
புதுப்பொறுப்பை ஏற்கும்.

என்
வளரும் நம்பிக்கைக்கும்
வாஞ்சைமிகு வாழ்த்துக்கும் உரிய
இளந்தலைமுறை ஆய்வாளர்களில்
ஒருவர் -
சூரிய மையத்தில் சுட்டெடுத்த
அறிவுக்கு அடையாளமான
என் மணியான
மாணவர் ய. மணிகண்டனின்
ஞானத்தமிழ்ப் பட்டறையில்
தயாரான தளவாடம்
இளமாறன்:

இவர்
யாப்பு நூல்
உரை வரலாற்றைக் கோப்புக் குலையாத
கோணத்தில் ஆய்ந்து கொடுத்துள்ள
திறம்
வியக்கத் தக்கது; விரும்பத் தக்கது.

உரைவகை எத்தனை?
உரையாசான்மார் வகைகள் எத்தனை?
உரைகளில் செயல்படும்
சமூக, சமய, அரசியல் இயங்கியல்
வன்மை மென்மைகள் எப்படி?
எல்லாம் இளமாறன் ஆய்வில் அத்துபடி!

தேமா, புளிமாக்கள் எல்லாம்
திரண்டுவந்து
இளமாறன் கன்னத்தில்
தித்திக்கும் முத்தம் கொடுக்கும் -
தங்கள்
இனவரலாற்றை ஆய்வுப் பேழையில்
வைத்துத் தந்ததற்காக...

உரைகளின்
போதுமை போதாமைகள் மீது
வெளிச்சம் பாய்ச்சி
விளக்கியதற்காக...

பாதைகளில்
விளக்கேற்றி வைப்பதுபோலத்
தக்க அறிஞர்கள்
அங்கங்கு ஆய்வுக்குள் வந்து
வினாக்கள் நிறுத்துவதற்காக,
விடைகள் பொருத்துவதற்காக...

தனது
திசுக்களிலும் தமிழ்மொழி
தேக்கி வைத்திருக்கும்
யாப்பு வளத்தை, யாப்பு வகைமைகளைப்
பிசகின்றித் தமிழன் உணரவும்
பிறருக்கு உணர்த்தவும்
உரைகண்டார் எல்லாம் அறிவுத்
திறப்பாட்டின் கரைகண்டார்!


உச்சத்தில் வைத்து
யாப்பருங்கல விருத்தி உரைபற்றி இந்த
ஆய்வேடு
உச்சரித்திருப்பதெல்லாம்
நிச்சயம் இளமாறனுக்குப் புகழ்ஒளியை
நிகழ்த்தும்.

திட்டமான நடை,
தேவையான மேற்கோள்கள்,
திட்பமான விவாதம்,
திருத்தமான விளக்கம் எல்லாமே

திரட்டப்பட்ட தரவுகள்,
ஆய்வு ஆதரவுகள், முரண், உடன்பாட்டு
மையங்களின் சிந்தனை முளைப்புகள்
ஆகியவற்றின் மீது
அறிவார்ந்த முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஐந்தில் ஒன்றாகவும்
தனித்த ஒன்றாகவும் இலக்கண உலகில்
இயங்குகிறது யாப்பு! ஆனால்
அதுவே
சதையாய், எலும்பாய், நரம்பாய்
உயிர்படைத்த முழு உடலுமாகிக்
காலகாலமாய்
இயக்கி வந்துள்ளது இலக்கியங்களை.

இளமாறனை
இப்படி இலக்கணத்துப்பக்கம்
நெறிப்படுத்திய ஆசான்
மணிகண்டனுக்கும்,
இலக்கியத் துறைப் பேராசான்
அரசுக்கும்
என் பாராட்டுக்கள்.

ஆய்வுப் பொருள் பழையதாக
இருக்கலாம்.
ஆய்வுப் போக்குப் புதியதாக
இருக்கவேண்டும் என்பதற்கு
இன்றைய எடுத்துக்காட்டு:
சென்னைப் பல்கலையின்
தமிழ் இலக்கியத்துறை!


வெளியீடு:

மாற்று வெளியீட்டகம்,
சென்னை
தொடர்பு எண் : 9382853646